***நூறு சவரன் மதிப்பு கொண்ட ஓர் நூல் 1500 பைசாவிற்கு விற்பனை***
"^நன்மக்களைப் பெறுதல்^"
சமீபத்தில் இந்நூலைக் கண்ணுற்றேன், வாசித்து முடித்தபின்...
சுண்ணாம்பு தடவா மண்கலயத்தில், பனைநீர்வடித்துக் குடித்தது போன்ற ஓர் உணர்வு.
நூலாசிரியர் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள்,மனிதவாழ்வின் மகத்துவத்தை மலர்த்தமிழில் உரைத்துள்ளார்.
இதை அறிந்திடாத நம் மக்கள்,அறிந்து கொள்ள அவா கொண்டு...முகநூலில் பதிகின்றேன்,முழுமையாய்ச் சென்றடைய...
அல்லும் பகலும் அயர்வின்றி உழைத்து, நம் வாயும் வயிறும் நிறைவதற்கு வழிவகுக்கும், கோமாதாவைப் பராமரிக்கும் கோமகனாம்...விவசாயப் புனிதர்களும் புரிந்து கொள்ளும் கலைச்சொற்கள்.
முப்பது ஆண்டுகட்கு முன், 350 காசுகளுக்கு விற்ற இந்நூல்...இன்று 1500 பைசாவாய் அதிகரித்து விட்டது...
ஸ்ரீ ராமகிருஷ்ணா தபோவனத்தின் முத்தான முதற்பதிப்பு - 1952ல்.
இன்று நமக்கெல்லாம் தேவை "அடிப்படைச் சீர்மை"இரண்டாவது தலைப்பு இது.
காதல்மணம், கற்பு, கருத்தரித்தல் போன்ற தலைப்புகளெல்லாம், விவாகம் மற்றும் கலப்பு மணத்துக்குப் பின்னால் வருபவை...
கர்ப்பிணிகளின் கடமைகள் முதல்,கலவியல் தத்துவம் வரை... அடடா!
பனி உருண்டையை விழுங்கியது போல,பளிங்குத் தமிழில் செதுக்கிய வரிகள்...
நன்மக்களைப் பெறுதல் எனும் இந்நூலை, நீங்கள் மட்டுமே வாங்கினால், அது சுயநலம்.நாலு பேருக்கு வாங்கிக் கொடுத்தால்... இது பொதுநலம்.
உங்கள் எதிரிகளுக்குக் கூட அஞ்சாது அனுப்புங்கள்... அஞ்சலிலாவது...பாசாங்கு துளியும் இன்றி, பாசத்தோடு வந்து விடுவர், பகை மறந்து!
மணமக்களுக்கு வழங்கும் பூச்செண்டு, ஒருநாள் மட்டுமே தாங்கும்.மணமிக்க இந்நூலைப் பரிசளித்துப் பாருங்கள்...ஒரு தலைமுறையே உமைத் தாங்கும்.
குறிப்பு: மேலைநாட்டவர் சொன்னால் தான் செவிமடுப்போம் என்போருக்கு, இப்புத்தகம் உங்களுக்கானது அல்ல...
திருச்சிற்றம்பலம்.



கருத்துகள்
கருத்துரையிடுக